
இந்திய அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நேரடி முகவர் பணி:
அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் சார்பில் நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு சம்பளம் கிடையாது அதாவது பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் திருப்பூர் அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஜூலை 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் தாராபுரம் பகுதி மக்கள் கலந்து கொள்ளலாம். அதே போல திருப்பூர் பகுதியில் ஜூலை 20 ஆம் தேதியும், மேட்டுப்பாளையம் பகுதியில் வருகிற ஜூலை 21 ஆம் தேதியும் நேர்காணல் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுடைய வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், 2 பாஸ்போர்ட் புகைப்படத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்படுவோர் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.