
நம்முடைய வாழ்வில் சாப்பிட நேரம் ஒதுக்குறோம். புத்தகம் படிக்க, தூங்க, மொபைல் பார்க்க, சினிமா பார்க்க, சீரியல் பார்க்க ஏன் பிடித்தமானவர்களிடம் நித்தம் கொஞ்ச நேரம் அரட்டை அடிக்கன்னு நிறைய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் தினசரி சில மணித்துளிகள் சிந்திக்க நேரம் ஒதுக்குறோமான்னு கேட்டா, இல்லைங்கிற பதில்தான் நிறைய பேர் சொல்வதாக இருக்கும்.
சிந்தனையும் ஒரு வகை தியானம் தாங்க. கண்மூடி செய்யும் தியானத்தை நாம் விழித்துக்கொண்டே செய்கிறோம். பிடித்த விஷயத்தில் மனம் லயித்து, அது சம்பந்தமாக அடுத்தடுத்து சிந்திக்கும்போது நிறைய களங்களில் எண்ணம் செல்லும். நாந்தான் வீட்டு வேலை செய்யும்போது, வெளியில் செல்லும்போது எப்போதுமே யோசனையில்தானே இருக்கிறேன் என்று சொல்லத் தோன்றுமே… அது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
அன்றாடப் பணிகளை செவ்வனே செய்தாலும் தினசரி கொஞ்ச நேரம் விடாமல் சிந்தனை வண்டியில் பயணம் செய்யுங்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களுக்கு பிடித்த விஷயங்களை நிதமும் நினைத்து அசைபோடுங்கள். உற்சாகம் கொப்பளிக்கும். அதற்காக ஓய்வாக இருக்கும் சாதகமான சில நிமிடங்களை முடிவு செய்யுங்கள். அழைப்பு மணி, மொபைல் அழைப்பு போன்ற தடங்கல்கள் இன்றி சிந்திக்க முடியும்…
நாள்தோறும் திங்க் டைம் வந்தவுடன் சிந்திக்க மனசு பிகு பண்ணும். அதை யோசிக்க வைக்கப் பழக்கணும்.அது அவ்வளவு எளிதல்ல. முதலில், மனசு சண்டித்தனம் பண்ணும். அப்புறம் போகப் போகத்தான் இணக்கமாகி நம்மை நல்லாவே கிரியேட்டிவா நிறைய. விஷயங்களை யோசிக்க வைக்கும்.
நம்முடைய சிந்தனையில் குழப்பம் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. அதுல குறிக்கோள் அவசியம். இலக்கு தெரியணும். சமையல் பற்றி யோசிக்கலாம். புதுப்புது ரெசிபி புலப்படும். அப்புறம் வித்தியாசமாக சமைத்து ருசிக்கலாம். சேனல்களில் பகிரலாம். விளையாட்டு சம்பந்தமாக சிந்தனை இருந்தால் லாவகமாக விளையாடி கோல் போடும் வழிகள் கிடைக்கும்.
அதை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தை வளர்க்க வாய்ப்பாக அமையும். வாசித்ததில் பிடித்தது என ஆக்கபூர்வமாக சிந்திக்கும் போது சிக்கல்களின் ஆரம்பம் புரியும். அவிழ்க்கும் முடிச்சும் தட்டுப்படும். வித்தியாசமாக சிந்தியுங்கள்.அடம் பிடிக்கும் மனசை அதட்டி, சிந்தனையை தொடர்ந்தால் நம்மோடு இணைந்து இணக்கமான சிநேகமுடன் உயர வைக்கும் வைட்டமின் சிந்தனை நேரம். சுமக்கத் தெரிந்துவிட்டால் சுமைகளும் சுகமே. சிந்திக்கப் பழகிவிட்டால் மலையும் மடுவே.
விடாது சிந்தியுங்கள். நித்தம் சிந்தியுங்கள். பொறுமையுடன் சிந்தனையுங்கள். நல்ல விஷயங்களையே சிந்தியுங்கள். சிறப்பாய், களிப்பாய் வாழலாம்…!!