
அண்ணா நினைவு தினம். கோவையில் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் மரியாதை.!
அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சார்பில் கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 40 இடங்களை பிடிக்கும் என்றும் வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும் என அண்ணா நினைவு நாளில் சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன் கந்தசாமி பி.ஜி.ஆர். அருண்குமார் ஜே.ஆர்.ஜெயராம் முன்னாள் எம்பிக்கள் எம்எல்ஏ-க்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.