
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டிக்கான வெற்றிக்கோப்பையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி போட்டிக்கான வெற்றிக்கோப்பை வரவேற்பு நிகழ்ச்சி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில்நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோர் நலம், கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் 7 வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி வெற்றி கோப்பையை வரவேற்று விளையாட்டு வீரர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் சீறிய முயற்சியால் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி போட்டி 16 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஆர்வமுள்ள வீரர்கள் போட்டியில் பங்கேற்று வென்று மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தர வேண்டுமென என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, மாவட்ட ஹாக்கி சங்கத்தலைவர் அரவிந்த்ராஜ், துணைத்தலைவர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் கிழவன் சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.