
ஆந்திராவில் 30,000 பெண்கள் மாயம் என நடிகர் பவன் கல்யாண் பேசியதற்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆந்திர மாநிலம் வேறூரில் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர் ஆந்திராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும் அவர்களில் 12,000 பெண்கள் மீட்கப் பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 18,000 பெண்களின் நிலைமை என்ன என்று தெரியவில்லை எனக் கூறினார் பவன் கல்யாண்.
இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பவன் கல்யாண் பேச்சு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பவன் கல்யாண் பேசியதற்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.ஆதாரங்களை வழங்க வேண்டும் இல்லையெனில் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.