
- தமிழகத்தின் தலைநகரான சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக இதுவரைக்கும் பதினாறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நிதி நிறுவனமான ஆருத்ரா நிறுவனம் மீது பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்திற்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர்.
ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தை கொடுக்காததால் ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது. இந்த மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை சென்னை, போரூரில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.