
நடிகர் கமல் நடிப்பு, இயக்கம் , பாடுவது என்று பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி என பல ஹிட்டான படங்களை தயாரித்த நிலையில் கடைசியாக விக்ரம் படத்தை தயாரித்து இருந்தது.
இந்த விக்ரம் படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது. அதை அடுத்து இந்த நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என இரண்டையும் தயாரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நிறுவனம் சார்பில் ராஜ் கமல் பெயரில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்து ஒரு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை.
திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் உங்களை வந்தடைந்தால் எந்த வகையிலும் அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். எங்கள் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடி செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.