Oplus_131072
எது தேவை..?
எது தேவையற்றது…?
மனதில் குடிகொண்டிருக்கும் துன்ப, துயரங்களைச் சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா…? அப்படியானால் முதலில் அவைகளை உங்கள் தலையில் இருந்து இறக்கி கீழே வையுங்கள் போதும்.அவற்றைக் கீழே வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா…? என்று நீங்கள் கேட்பது புரிகிறது….பெரும்பாலும் துன்பம் என்பதே, அதை நீங்கள் தூக்கித் தலையில் வைத்திருப்பதால் தான் வருகிறது என்பது தான் மெய்…”வாழ்க்கைப் பயணம் இனிமையாக அமைய, மனதில் உள்ள சுமைகளைக் குறைத்துக் கொண்டால், மகிழ்ச்சி கூடும்,”
ஜென் (zen) துறவிகள் இருவர், தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் போது, வழியில் ஓர் அழகான இளம்பெண் சாலையைக் கடக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.இதைக் கண்ட துறவிகளில் இளம்துறவி ஒருவர், என்னவாயிற்று பெண்ணே…? ஏதேனும் உதவி தேவையா…? என்று கேட்டார்…பதிலுக்கு அந்தப் பெண்,
“நான் எனது தோழியின் திருமணத்துக்குச் செல்கின்றேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது, நடந்து சென்றால் உறுதியாக என், அழகிய பட்டாடைப் பாழாகி விடும்” என்று கூறி வருந்தினாள்…”கவலை கொள்ளாதே பெண்ணே!, என் தோள்களின் மீது ஏறிக் கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்து விடுகின்றேன்” என்று கூறி விட்டு அவளுக்கு உதவி புரிந்தார்…
திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு மூத்தத் துறவி சற்றுக் கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது…”ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்…?” என்று கேட்க, அதற்கு அவர்.,”நாம் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு அந்தப் பெண்ணை எப்படி நீங்கள் தொட்டுத் தூக்கலாம்…? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா…?” என்றார்.அதற்கு, உதவி செய்த அந்த இளம் துறவி,
“தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கி விட்டேன்”, நீங்கள் தான் அந்நிகழ்வை மனதில் இருந்து இன்னும் இறக்காமல் சுமந்து கொண்டே இருக்கிறீர்கள்”… என்றார்.
இப்படித் தான் நாமும் நமது வாழ்வில், பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் சுமந்துக் கொண்டு செல்கின்றோம்…”அன்பை மட்டுமே நேசியுங்கள்” என்று கூறி விட்டுச் சென்றார்…
ஆம் நண்பர்களே…!அனைத்தையும், “தனக்கு, தனக்கு’ என, வண்டி வண்டியாய் குப்பையைச் சேர்த்துக் கொண்டு அல்லலுறுகின்றனர்…அந்தக் குப்பைகளை தூக்கி எறிந்து விட்டால், மனம் தெளிவாகும். வாழ்க்கை என்ற பயணம் இனிமையாக அமைய, சுமைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்…நமக்கு அடுத்த நாழிகைகள் உறுதியாக இல்லை…!
மனதில் தேவையற்ற அழுக்குகளை சுமக்க வேண்டாமே….!எது தேவை….?
எது தேவையற்றது…? என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால், நம்முடைய வாழ்வும் என்றென்றும் மகிழ்வாக இருக்கும்…




