
- வேலூர் | பணம் வராத ஏடிஎம்! கோடரியால் சுக்கு நூறாக உடைத்த நபரால் பரபரப்பு!
ஊசூர் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஒருவர் பணம் எடுக்க வந்தபோது பணம் வராததால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்ததால் பரபரப்புவேலூர்: ஊசூர் அணைக்கட்டு மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) என்பவர் பணம் எடுக்க வந்துள்ளார்.
எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை பொருத்தி பலமுறை பணம் எடுக்க முயற்சி செய்தும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வராததால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் உடைக்கும் சத்தம் கேட்டு ஓடி வந்து கந்தசாமியை தடுத்தும், ஆத்திரம் அடங்காமல் கந்தசாமி தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் துண்டு துண்டாக உடைத்து நொறுக்கியுள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததில் வேலூர் நகர டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் அருகில் இருந்தவர்களிடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது, ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரத்தால் கந்தசாமி கோபமடைந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் கந்தசாமி சற்று மனநலம் பதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்தது.