
ஒரு மனிதன் தன் மனதை எவ்வாறு புனிதமாக்கி கொள்ளமுடியும் என்ற கேள்விக்கு ஒரு சிறுகதையின் மூலம் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
மகான் ஒருவர் கிராமத்திற்கு வருகை புரிந்திருந்தார். கிராம மக்கள் அனைவரும் அவரிடம் சென்று ஆசி பெற்றார்கள். கடைசியாக அவ்வூரின் பெரும் செல்வந்தர் மகானிடம் ஆசி பெற்று விட்டு அவரிடம் தான் கேட்பதற்கு ஒரு விஷயம் உள்ளது என்றார்.
மகான் விளக்கம் அளிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
செல்வந்தர் தன்னுடைய கேள்வியாக,
“சிறுவயதிலிருந்து என்னுடைய கடின உழைப்பால் தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறேன். எல்லா விதத்திலும் கடவுள் எனக்கு நிறைவான வாழ்க்கையை கொடுத்துள்ளார். ஆனாலும் என் மனது எப்பொழுதும் எதையோ ஒன்றை நினைத்து அமைதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. நான் எவ்வாறு என் மனதை அமைதியாக வைத்திருக்க முடியும்? “
என்று கேட்டார்.
மகான், தினமும் இராமாயணம் படிக்குமாறு அறிவுறுத்தினார்.
செல்வந்தர் பதிலில் திருப்தி அடையாமல் மேலும் மகானின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
மகான், ஏதோ மறுபடியும் கேட்க நினைக்கிறாய், என்னவென்று சொல்? என்றார்.
செல்வந்தர், நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்து ராமாயணத்தை என் பாட்டி மூலமாகவும் , என் தாயார் மூலமாகவும் மறுபடியும் என் ஆசிரியர் வழியாகவும் கேட்டு இருக்கிறேன். பின்பு ராமாயணத்தை படித்தும் இருக்கிறேன் எனக்கு ராமாயணத்தின் எல்லா காண்டங்களும் நன்றாக தெரியும். மறுபடியும் அதை படிக்க சொல்கிறீர்களே, அதுதான் என்னுடைய சந்தேகம் என்றார்.
மகானுக்கும் செல்வந்தருக்கு மான உரையாடல்:
மகான்: இன்று குளித்தீர்களா?
செல்வந்தர்: குளித்து விட்டேன்.
மகான்: நேற்று குளித்தீர்களா?
செல்வந்தர்: நேற்றும் குளித்தேன். இன்றும் குளித்தேன். நாளையும் குளிப்பேன்.
மகான்: நேற்று குளித்தீர்கள், இன்று என்னை பார்க்க வருகிறீர்கள் அதனால் குளித்தீர்கள். நாளை எதற்காக குளிக்கவேண்டும்? வீட்டில் தானே இருக்க போகிறீர்கள்.
கேள்விக்கு செல்வந்தர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்தார்.
மகான்: நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடைய உடலில் அழுக்கு படிவதை தடுக்க முடியாது. அதுபோல் தான் நம்முடைய மனதும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தினம்தினம் ஏதோ ஒரு வகையில் அழுக்காகி கொண்டேதான் இருக்கும். உடலுக்கு எவ்வாறு தினமும் நீரால் தூய்மையை கொடுக்கிறீர்களோ, அதுபோல் மனதை தினமும் ராம நாமத்தால் குளிப்பாட்டுங்கள். மனம் தூய்மை அடையும்.
இந்த பதிலால் அந்த செல்வந்தர் திருப்தியுற்றவராய் விடைபெற்றார்.