
ஓ.பன்னீர்செல்வம் குஜராத்திற்கு திடீர் பயணம். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு.
ஓ.பன்னீர்செல்வம் திடீரென இன்று காலை குஜராத் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04-ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறு சுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்து உள்ளது. அதிமுகவை பொறுத்த வரையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது.
இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இருவரும் தனித்தனியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு காலையில் புறப்பட்டு உள்ளார்.
அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும் குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.