
கல்வியாளர்களை கலந்தோசிக்காமல் உயர்கல்வித்துறையில் பொது பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் தமிழக அரசுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவரின் அறிக்கையில் “பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலைநிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டுகால ஆட்சியில் கல்வித்துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக 2011ல் திமுக ஆட்சியில் உயர்கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர்கள் சேர்க்கையினை தொடர்ந்து பத்தாண்டு கால கழக ஆட்சியில் 51% இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்ந்தது.
கடந்த இரண்டு ஆண்டு காலம் விடியா திமுக ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசின் உயர்கல்வித்துறை சீரழிந்து விட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். துறையின் அமைச்சர் பொன்முடி தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து தமிழ்நாட்டை இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர் கல்வித் துறையின் வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் இருப்பதால் தமிழகத்தில் உயர் கல்வித் துறை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விடியா திமுக அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத்திட்டத்தால் தமிழகத்தில் உயர் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது தமிழக உயர்கல்வித்துறை கபட வேடம் இட்ட ஆட்சியாளர்களுடையே சிக்கி குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல் வேதனைக்குரியது. எனவே கல்வித்துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டு வருமுன் ஆட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்”, என்று தமிழக அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.