குளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்..!!

Oplus_131072

குளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்..

வீட்டின் அறைகளை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைவிட மேலாக குளியல் அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் தொற்றுகளை உற்பத்தி செய்யும் இடமாக குளியலறை மாறிவிடும். குளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்:

வீட்டில் ‘வெஸ்டர்ன் டைப்’ கழிப்பறை இருந்தால் அதனை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். சிலர் அதனை பயன்படுத்திய பிறகு திறந்த நிலையிலேயே வைக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி திறந்திருப்பது பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கழிப்பறையில் இருந்து வெளியேறுவதற்கு வழி வகுக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது அவர்களையும் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் இருக்கிறது.

கழிவறையில் இருக்கும் ‘சிங்க்’ அருகில் பல் துலக்கும் பிரஷை வைத்திருக்கவும் கூடாது. கழிவறையில் இருந்து வெளிப்படும் திரவ துளிகள் காற்றில் கலந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை மாசுபடுத்தக்கூடும். சோப்பு கொண்டு கைகளை கழுவும்போதோ, குளிக்கும்போதோ சிதறும் நீர்த்துளிகளில் இருந்து வெளிப்படும் அழுக்குகள் காற்றில் கலந்தோ, சுவர்களில் படிந்திருந்தோ மாசுக்களை ஏற்படுத்தலாம். பல் துலக்கும் பிரஷ்களை கழிவறையில் இருந்து குறைந்தது 4 அடி தூரத்திற்கு அப்பால் வைத்திருப்பது நல்லது. பிரஷ்களை ரேக்கில் வைத்திருந்தால் அதன் வாய் பகுதியை ஏதாவது கவர் கொண்டு மூடி வைத்திருப்பது நல்லது. 3 முதல் 5 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்றி விடவும்.

குளிக்கும்போது நிறைய பேர் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு ‘லூபா’ எனப்படும் ஸ்பான்ஞ்சை பயன்படுத்துவார்கள். தினசரி பயன்படுத்தப்படும் லூபாக்கள் பலவகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குளித்ததும் ஈரப்பதமாக இருக்கும் ‘லூபா’வை சரியாக உலர்த்தாமல் குளியல் அறையிலேயே வைத்திருந்தால் நுண்கிருமிகள் எளிதில் வளர்ச்சி அடைந்துவிடும். அப்படி கிருமிகள் படிந்திருக்கும் லூபாவை உபயோகித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் சருமத்தில் எளிதில் ஊடுருவக்கூடும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லூபாவை மாற்ற வேண்டியது அவசியம். குளியலறையின் ஈரமான சூழல் பாக்டீரியாக்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் ஈரமான லூபாவை அங்கு வைக்கக்கூடாது. வாரம் ஒருமுறை லூபாவை பிளிச்சிங் கரைசலில் கிருமி நீக்கம் செய்வது நல்லது.

நிறைய பேர் குளித்து முடித்ததும் டவலை குளியல் அறையிலேயே தொங்கவிட்டுவிடுவார்கள். ஈரமான டவலை குளியல் அறை போன்ற ஈரமான, வெளிச்சம் குறைவான பகுதியில் தொங்கவிடும்போது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் டவலில் படியக்கூடும். குளித்ததும் டவலை நன்றாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும். நிறைய பேர் அந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தனியாக டவல் உபயோகிப்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

குளியலறையின் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கு நிறைய பேர் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற நச்சு ரசாயனங்கள் கொண்ட துப்புரவு தயாரிப்புகளை பயன்படுத்து கிறார்கள். இத்தகைய பொருட்கள் நச்சுத்தன்மையை காற்றில் மெதுவாக வெளியிடும். அதனை கர்ப்பிணிப் பெண்கள் சுவாசித்தால் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் பிறக்கும் குழந்தைக்கு உடல்நல குறைபாடு போன்ற ஆபத்துகள் ஏற்படும். அதனால் நச்சு ரசாயனங்கள் அதிகம் இல்லாத கிளனர்களை பயன்படுத்துங்கள்.

Read Previous

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

Read Next

மழை காலங்களில்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular