Oplus_131072
உலகளவில் ஐந்து கோடிக்கும் அதிகமான தம்பதியர், அதுவும் நம் நாட்டில் ஆறுக்கு ஒரு தம்பதியினர் என்ற அளவில், இன்றைய இளைய தலைமுறையினர் சந்தித்துவரும் மிகப் பெரிய சவால்.. “குழந்தைப்பேறின்மை தான்..!”
உண்மையில் இன்று குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களை எடுத்துக் கொண்டோமேயானால், அதில் குழந்தையின்மைக்கான காரணமாய் பெண் 30 குடும்பங்களில் மட்டுமே இருக்கிறாள். அடுத்த 30 குடும்பங்களில் ஆண்கள்தான் அதற்குக் காரணமாய் இருக்கிறார்கள். இருவருக்குமே பிரச்சினைகள் என்பது மற்ற 30 குடும்பங்களிலும், 10 சதவிகிதம் மட்டும் அறியப்படாத காரணங்களுக்காக என்று காணப்படுகின்றன..
ஆண்களில் பொதுவாக விந்தணுக்களில் பிறவிக் குறைபாடுகள், மரபணுக்கள் சார்ந்த குறைபாடுகள், விரைப்பையில் அம்மை நோய், கட்டிகள் அல்லது நோய்த்தொற்று, புற்றுநோய், அதிக வெப்பமான சூழலில் பணிபுரிதல் எனக் குறைபாடுகளும், பெண்களுக்கு சினைப்பையில் கட்டிகள், பிசிஓடி, கர்ப்பப்பையில் கட்டி அல்லது சதை வீக்கம், சினைகுழாய்களில் நோய்த்தொற்று போன்ற காரணங்களால் குறைபாடுகளும் காணப்பட்டாலும், இவை அனைத்தையும் விட, அதிகரிக்கும் திருமண வயது, மது, புகைப்பிடித்தல், உடற்பருமன், உடற்பயிற்சியின்மை என வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் குழந்தைப்பேறின்மை என்பது இன்று இருபாலருக்குமான முக்கிய காரணங்களாக தற்போது உள்ளன..
ஆனால் இவையனைத்திற்கும் மேலாக, மன அழுத்தம் மட்டுமே, 20% வரை கருத்தரித்தலை குறைத்து விடுகிறது..
ஆக, ஆண் பெண் இருபாலரிடமும்…
உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல் உறக்கம், மன அழுத்தமின்மை என வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் மகப்பேறின்மைக்கான தீர்வுகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை..!!




