கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட அடுத்த சில மாதங்களிலே உலக நாடுகளில் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர் பறிபோனது. அதேபோல் உலக நாடுகளை மிரள வைத்த இந்த கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் சீனாவில் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த மனித மெடப்னியுமோ வைரஸ் (ஹெச்.எம்.பி.வி) தொற்று மிக வேகமாக பரவுவதாகவும், நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையில் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக பரவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் மட்டும் இன்றி இன்புளுயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கொரோனா ஆகியவையும் பரவி வருவதால் அவற்றை தடுப்பதற்காக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.




