
மேல்மலையனூர் அருகே குடிபோதையில் தம்பியை அண்ணன் கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கூடுவாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (36). முடிவெட்டும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (30). இவர்களுக்கு லட்சணா, சஞ்சனா என்ற 2 மகள்களும், காமேஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள், இன்று குலதெய்வகோயிலில் வழிபாடு செய்து பின்பு காதணி விழா நடத்த திட்டமிட்டிருந்தனர். முருகனின் அண்ணன் விநாயகமும் முடிவெட்டும் தொழில் செய்து வருகிறார். அவர் நேற்றிரவு குடிபோதையில் வந்து குடும்ப தகராறு காரணமாக தம்பியுடன் தகராறு செய்துள்ளார். முருகன் எவ்வளவோ சமாதானம் செய்தும் விநாயகம் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து முருகனின் மார்பில் சரமாரி குத்தி உள்ளார். பலத்த காயமடைந்த முருகன் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து விநாயகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதைப்பார்த்த குடும்பத்தினர் கதறினர்.
பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.