இத்தாலியில் உள்ள மார்ச்சே பாலிடெக்னிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஓர் ஆய்வில் ஆஸ்டிரோசைட்டுகள் எனப்படும் மூளை உயிரணுக்களின் செயல்பாடு அதிகரிப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது என்று கூறியுள்ளது. ஜர்னல் ஆஃப் நியூரோசயின்ஸ் வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் நீண்ட நாள் தூக்கமின்மை மூளை சிதைவை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது..
இந்த ஆஸ்டிரோசைட்டுகள் நம் உடலில் எந்த மாதிரியான பணிகளைச் செய்கின்றன, இவை மூளைக்கு நல்லதா, தூக்கமின்மையால் உடலில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன…???
“ஆஸ்டிரோசைட்டுகள் என்பது மூளையில் உள்ள செல்கள். இவை உறக்கத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த ஆஸ்டிரோசைட்டுகள் நாம் விழித்துக்கொண்டு இருக்கும்போது அடினோசையின் என்ற உயிர் ரசாயன வேதிப் பொருளைக் குவிக்கத் துவங்கும். அதிகப்படியான அடினோசையின் குவியும்போது நமக்குத் தூக்கத்திற்கான ஓர் அழுத்தம் ஏற்படும். இந்த அடினோசையின், நியோரோனல் ஏ1 என்ற ஏற்பிகளில் வேலை செய்து தூக்கத்தைத் தூண்டுகிறது. இதனாலேயே இந்த ஆஸ்டிரோசைட்டுகள் தூக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளன. .
பகலில் நாம் விழித்திருக்கும்போது நம் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால் நம் மூளை தொடர்ந்து ஒரு வேதியியல் மாற்றத்திற்கு உட்பட்டு நிறையக் கழிவுப்பொருட்களை உருவாக்கும். இந்த கழிவுப்பொருட்களை வெளியேற்றக்கூடிய வேலைகளைச் செய்யக்கூடியது இந்த ஆஸ்டிரோசைட்டுகள்தான். மூளையில் உள்ள எலக்ட்ரிக் சிக்னல்ஸ், நியூரான்களிடம் சரியாகத் தகவல்களைப் பரிமாறுவதற்கு குளுட்டமிக் ஆசிட் மற்றும் லாக்டிக் ஆசிட் போன்ற உயிர் வேதியியல் பொருட்கள் அவசியமானதாக உள்ளன. எனவே இந்த ஆஸ்டிரோசைட்டுகள் உறக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது..
நீண்ட நாள் உறக்கம் சரியாக இல்லாதவர்களிடமும் இன்ஸோம்னியா பிரச்னை உள்ளவர்களிடமும் இந்த ஆஸ்டிரோசைட்டுகள் அதிக சேதமடைகின்றன. அதேபோல் அதிகப்படியான உடல் அழுத்தம் மற்றும் மன அழுத்ததிற்கு உள்ளாகும்போதும் இந்த ஆஸ்டிரொக்சைட்டுகள் சேதமடைகின்றன. அதனால் நம் உறக்கம் பாதிக்கிறது..மன அழுத்தம், நீரிழிவு மற்றும் உயர் ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் ரத்தநாளங்களில் உள்காயங்கள் ஏற்படும்போது ஆஸ்டிரோசைட்டுகள் பாதிக்கப்படுகின்றன..
ஆஸ்டிரொக்சைட்டுகள் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும். உறக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை REM (Rapid Eye Movement) உறக்கம் மற்றும் NREM (Non-Rapid Eye Movement) உறக்கம். இதில் REM என்பது வெறும் மேலோட்டமான உறக்க நிலை. இந்த NREM என்பது ஆழ்ந்த நிலை உறக்கம். இந்த ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துவதில் ஆஸ்டிரோசைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன..உறக்கம் சரியாக இல்லாமல் இருப்பதால் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய், மனப்பதற்ற நோய், மனத்தாழ்வு நிலை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது..
ஆஸ்டிரோ சைட்டுகளை நாம் நல்ல முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனில் மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; நன்றாகத் தூங்க வேண்டும்; முக்கியமாகக் கைப்பேசியைப் படுக்கை அறைக்கு எடுத்துச்செல்லாமல் இருக்க வேண்டும்; செல்போன் பார்ப்பதைக் குறைக்க வேண்டும்; இருள் சூழ்ந்த அமைதியான இடத்தில் தூங்க வேண்டும்” என்று கூறுகிறார் மருத்துவர்.




