
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளம் அருகே ரத்தகாயத்துடன் தலை குப்புற நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியே வந்தவர்கள் பார்த்துவிட்டு ரயில்வே அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உறவினர்களிடம் தகவல் அளித்தனர்.
விசாரணையில் திருச்சி மாவட்டம் உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் யுவராஜ் சங்கர் (34) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது உறையூர் காவல்நிலையத்தில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து உடலை மீட்டு ரயில்வே போலீசார் வழக்குபதிந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.