நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் பொழுது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்து கடவுள்களான சிவன் படத்தை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கியுள்ளார்.
மேலும் “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையிலும் வெறுப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவினர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் இல்லை” என்று அவர் கூறி உள்ளார்.இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே கூறும்பொழுது “ராகுல் காந்தியின் பேச்சை கேட்டேன். ராகுல் காந்தி உட்பட நாங்கள் யாரும் இந்துத்துவத்தை அவமதிக்க மாட்டோம். இந்துத்துவத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். பாஜக என்பது இந்துத்துவம் இல்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார். நான் பாஜகவை கைவிட்டு விட்டேன். இந்துத்துவத்தை அல்ல என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளேன். ராகுல் காந்தி மக்களவையில் சிவபெருமானின் படத்தை காட்ட முயன்றார் ஆனால் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்துத்துவமா..? ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கமதிப்பதாக நான் நினைக்கவில்லை. நமது இந்துத்துவம் மிகவும் புனிதமானது”, என அவர் கூறி உள்ளார்.