இந்தப் பரந்து விரிந்த உலகில் பிறந்த நாம் அனைவருமே ஜெயிக்கப் பிறந்தவர்கள் தான். நாம் எடுத்த காரியங்களில் நமக்கு தோல்வி என்பது வந்தாலும் நம் திறமையை வெளிக்காட்டி ஜெயிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. எனவே தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் இதை தெளிவாக புரிந்து கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்..
ஒரு தொழிலதிபர் தன் தொழிலில் படுதோல்வி அடைந்த நிலையில் தெருவில் வருவோர் போரை மனவேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டின் எதிரில் ஒரு குப்பைத் தொட்டி இருப்பதை கவனிக்கிறார் அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலில் ஒருவர் வந்து குப்பைத்தொட்டியில் தனக்கு தேவையான பழைய பேப்பர்களை எடுத்து சாக்கில் நிரப்பிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே குப்பைத் தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் ஒருவர் வந்து தனக்கு தேவையான தட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை சாக்கில் போட்டுக் கொண்டிருந்தார் அதன் பிறகு ஒரு நாய் வந்து இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு போனது கடைசியாக வந்த பசு குப்பையில் இருந்த பச்சை இலைகளை சாப்பிட்டு போனது. இதை பார்த்து அந்த தொழில் அதிபர் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார் ஒரு சின்ன குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் வாழ்கிறார்கள் என்றால் இங்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் நாம் எல்லோரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தனது மனதை திடப்படுத்திக் கொண்டு தோல்வியடைந்த தன்னுடைய பழைய தொழிலை ஆரம்பிக்க கிளம்பினார். இந்த கதையில் சொன்னது போல தோல்வி அடைந்ததை நினைத்து வருந்தாமல் நம்மை சுற்றி பாருங்கள் இவ்வளவு பெரிய உலகில் நமக்கென்று ஒரு வழி இல்லாமல் போய்விடுமா என்ன. எல்லாம் முடிந்து விட்டது என்று தோல்வியை கண்டு துவண்டு போகும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு பாருங்கள். தோல்வி அடைந்தாலும் எழுந்து வரக்கூடிய மன தைரியம் இருந்தால் போதும் வெற்றி நிச்சயம் இதை தெளிவாக புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் முயற்சித்து பாருங்கள்..!!