
நேட்டோ மாநாட்டில் ஜெலேன்ஸ்கி ஒதுங்கி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 31 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
மாநாட்டின் இரண்டாவது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகி கலந்துகொண்டார். இந்நிகழ்வின் ஒரு தருணத்தில் உலகத் தலைவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த நிலையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டார் என்று சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால், சந்தர்ப்பச் சூழலின் காரணமாகவே அந்தத் தருணத்தில் ஜெலன்ஸ்கி தனியாக நின்று கொண்டிருக்கிறார் என்று சிலர் விளக்கமளித்துள்ளனர்.
இந்த நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி, புதிய ஆயுதங்கள் வழங்க வேண்டும், நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு விடுக்க வேண்டும். உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், நேட்டோவில் உக்ரைன் எப்போது இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை, என்ற தகவல் வெளியாகி உள்ளது.