படிப்பதற்கு மட்டுமல்ல.. சிந்திப்பதற்கும் தான் இந்த பதிவு..!!

# படித்து சிந்திக்க #

“உன் அண்ணன் ஒல்லியா, சுறுசுறுப்பா இருக்காரு. ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்காரு. எப்பவும் உற்சாகமா இருக்காரு.

நீ பொத்தப் பூசணிக்கா மாதிரி இருக்க. எப்பவும் சோஃபாவில உக்காந்துக்கிட்டு, டல்லா இருக்க. எழுந்திருக்கக் கூடக் கஷ்டப்படற. ஏண்டா இப்படி?” என்றான் அனிலின் நண்பன் நாகு.

“சில பேரோட உடம்பு வாகு அப்படி. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றான் அனில்.

அனிலின் அம்மா தங்கம் ஒரு தட்டில் இனிப்பு, சமோசா, காராபூந்தி ஆகியவற்றை வைத்து எடுத்து வந்து, நாகுவிடம் கொடுத்தாள்.

“எனக்கு இல்லையாம்மா?” என்றான் அனில்.

“ஏண்டா, நீ இப்பதானே இட்லி சாப்பிட்ட?” என்றாள் தங்கம், கடிந்து கொள்ளும் குரலில்

“அதனால என்ன? என் நண்பன் வீட்டுக்கு வந்திருக்கான். அவனோட சேர்ந்து நான் ஸ்நாக்ஸ் சாப்பிடக் கூடாதா?” என்றான் அனில்.

தங்கம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்று, இன்னொரு தட்டில் சிற்றுண்டிகளை வைத்து எடுத்து வந்து, அனிலிடம் கொடுத்தாள்.

“என்னம்மா, இவ்வளவு கொஞ்சமா வச்சிருக்க?” என்றான் அனில், காராபூந்தியை எடுத்து வாயில் போட்டபடியே.

“நேத்திக்கெல்லாம் வயிற்று வலின்னு சொல்லிக்கிட்டிருந்த! இதையெல்லாம் நீ சாப்பிடவே கூடாது. அதனாலதான் உனக்கு இட்லி செஞ்சு கொடுத்தேன்.”

“வயிற்று வலி வந்தது நேத்திக்கும்மா. இன்னிக்கு என்ன வந்தது?”

அப்போது, வெளியே போவதற்காக உடையணிந்து உள்ளிருந்து வந்த அனிலின் அண்ணன் சுபாஷ், நாகுவைப் பார்த்துச் சிரித்து விட்டு, “அம்மா! நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன். இன்னிக்கு ராத்திரி எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்றான்.

“ஏண்டா?” என்றாள் தங்கம்.

“அசோசியேஷன் மீட்டிங் இருக்கு. அங்கே ஸ்வீட், காரம், காப்பி, ஐஸ்கிரீம்னு ஏதாவது கொடுப்பாங்க. அதுக்கப்பறம், ராத்திரி சாப்பிட்டா ஹெவி ஆயிடும்.”

“அது எப்படிடா போதும்? ராத்திரி வீட்டுக்கு வந்து ரெண்டு இட்லியாவது சாப்பிடு!” என்றாள் தங்கம்.

“வேண்டாம்மா! அப்படி நீ எனக்காக இட்லி செஞ்சு வச்சா, என்னால அதை நாளைக்குக் காலையிலதான் சாப்பிட முடியும்!” என்று கூறி விட்டு வெளியே சென்றான் சுபாஷ்.

‘அண்ணன் ஏன் இப்படி சுறுசுறுப்பா, உற்சாகமா இருக்காரு, தம்பி ஏன் இப்படி சக்தியோ சுறுசுறுப்போ இல்லாம வியாதி வந்தவன் மாதிரி இருக்கான்னு இப்பதானே புரியுது!’ என்று நினைத்துக் கொண்டான் நாகு.

நீதி :

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்பது போல், அதிகம் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

Read Previous

மனதை தொட்ட கதை.. பலமுறை படித்தாலும் கண்களில் கண்ணீரை வர வரைக்கும் அற்புதமான பதிவு..!!

Read Next

உங்க வீட்டிற்கு குலதெய்வம் வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular