
- கடலூர் : பண்ருட்டி அருகே அரசு பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே செம்மேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா மகன் சுகுமார். இவரும் அதே ஊரை சேர்ந்த ஐயப்பன் மகன் சரண்ராஜ் என்பவரும் சோலார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணி புரிந்து வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் வழக்கம் போல் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து இருவரும் சின்ன சேமக்கோட்டை அய்யனார் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக வேலூர் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இந்த விபத்தில் இரண்டு வாலிபர்களும் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து மோதி இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் செம்மேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.