விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG குழந்தை உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று தான் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர். இப்படி இருக்கையில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது யுகேஜி மாணவி உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளியில் யுகேஜி படித்து வரும் மாணவி லியா லட்சுமி உணவு இடைவேளையின் போது வெளியே சென்றுள்ளார்.
ஆனால் இடைவேளை முடிந்து நீண்ட நேரம் ஆன போதிலும் அந்த குழந்தை மீண்டும் வகுப்பறைக்கு வரவில்லை. இதனால் பதற்றமான ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். சிறிது நேரம் களைத்து அந்த மாணவி பள்ளி கழிவுநீர் தொட்டியில் லியா விழுந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கழிவுநீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளிக்கு பின்புறத்தில் இருக்கும் மைதானத்திற்கு செல்லும் வழியில் தான் இந்த கழிவுநீர் தொட்டி இருப்பதாகவும், அது முறைப்படி பராமரிக்காமல் மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்ததால் இந்த உயிரிழப்பு நேரிட்டு உள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.