பொடிசிப்பாட்டி( சிறுகதை)..!! மனதை ஈர்த்த அருமையான சிறுகதை..!! படித்ததில் கண்ணீர் வரவைத்தது..!!..!!

Oplus_131072

பொடிசிப்பாட்டி மந்தையில கடை போட்டு ருந்துச்சு. கடைன்னா ஒடனே சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி நெனச்சிடப்புடாது சும்மா ஒரு சாக்க விரிச்சி அதுல சின்னப்புள்ளைக தீம்பண்டம் விக்கும் கடலமுட்டாயி தேன்முட்டாயி எள்ளுமுட்டாயி எலந்தப்பழம் புளியுருண்ட மாங்கா நெல்லிக்கா அரநெல்லிக்கா கொய்யாப்பழம் சீசன்ல சோளக்கருது மரவள்ளிக்கெழங்குன்னு விக்கும்,
பெருசாமொதலுகெடையாது 1000 ரூவா தான் பள்ளிக்கொடம் போறபுள்ளக
போறப்ப வாரப்ப வாங்கிட்டுப்போகும் ஒரு ரூவா ரெண்டுரூவா யாவாரம் தான் அதுல அது கஞ்சிக்கி மிஞ்சும். அப்புட்டுதேன்
அந்த எடத்துக்கு அம்புட்டுப்போதும்
காலை3 மணிக்கி எந்திரிச்சி நார் பொட்டி அப்புறம் குட்டிச்சாக்கு கொஞ்சம் பைகளோட ஆரப்பாளயத்துல இருந்து சிம்மக்கல்லுக்கு நடந்துபோகும்
சிம்மக்கல்லுலதான் மொத்த யாவாரம்
கடலமுட்டாயி பாக்கெட்டுவாங்குனா 24 முட்டாயி இருக்கும் 20ரூவாக்கிக் கொடுப்பாக . ஒண்ணு ஒரு ரூவா நாளு ரூவா கெடைக்கும். அதுமாதிரி சோளக்கருது எண்ணி வாங்கனும் 25 , 50 ந்னு எலந்த[ப்பழம் அழந்துபோடுவாக
படி இம்புட்டுன்னு. முட்டாயெல்லாம் இதுமாதிரி பாக்கேட்டுல வாங்கனும்
பிரிச்சிப்பாட்டில்ல போட்டுவிக்கனும்
மரவள்ளிக்கெழங்கு கிலோ கணக்குல வாங்கி யாந்து அவிச்சி விக்கும் அதச் சூடா வாங்கிச் சாப்புடுறத்துக்குண்ணே ஆளுக பெரியவுக வருவாக
மாங்கா நறுக்கி மொளகாதடவி விக்கும்,
இப்புடித்தான் பொழப்பு ஓடிக்கிட்டு
இருந்துச்சு.
அன்னிக்கி அப்புடித்தான்காலங்காத்தால 3மணிக்கி கெளம்பிப்போச்சு போறவழில கிராஸ்ரோட்டுல டீக்கடையில ஒரு டீத்தண்ணி குடிக்கும் . அன்னிக்கி அப்புடித்தான் வாங்கி குடிச்சிட்டுசாமானுகள எடுத்துக்கிட்டுக் கெளம்பும்போது ஒரு லாரிமுன்னாடி
தாண்டிப்போச்சு.
அதுல இருந்து கழண்டு விழுந்த கட்ட ஒண்ணு பாட்டி மண்டையில அடிச்சிடுச்சு. மயங்கிக்கீழவுழுந்துடுச்சு
கண்ணு முழிச்சிப்பாத்தா கவருமெண்டு ஆசுப்பத்திரில படுத்துருக்கு தலையில
கட்டு. வலி விண்ணு விண்ணுன்னு தெரிச்சிது. பாட்டிக்கி சொந்தமுன்னு சொல்லிக்க ஆளு கெடையாது
அதுனால ஆசுபத்திரிலயும் ஆரும் கவனிக்கல
இன்னைக்கிக் கடதொறந்தாத்தான பொழப் புன்னு நாவகம் வந்தவன்ன விருட்டுன்னு எந்திரிச்சிக்கெளம்புச்சு
நர்ஸம்மா” பாட்டி எங்க கெளம்பிட்டீக
தலையில தையல் போட்டுருக்கு
எக்ஸ்ரே எடுத்துப்பாக்கணும் டாக்டர் வருவாரு பாத்துட்டுப்போன்னு சொன்னாக
பாட்டிசொல்லிடுச்சு அவரு கஞ்சி ஊத்துவாரா கடதொறந்தாத்தான் கஞ்சின்னு சொல்லிட்டு பொட்டியக் கேட்டு வாங்கிட்டுக்கெளம்பிடுச்சு
நேரமாயிட்டதால ஆனைக்கல்லு சந்த மூடிருப்பாக இருக்குறத வைச்சிக் கடையத் தொறந்துடுவோம் நு நெனச்சிவெயில்ல நடந்துவந்துஒருவழியாக்கடயத்தொறந்து வைச்சிட்டு ஒக்காந்துச்சு பசி மயக்கம் வேற கடையிலயே மயங்கிடுச்சு.
பக்கத்துல இருந்தவுக பாத்துட்டு மூஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்புனாக ஒடம்பு அனலாக்கொதிக்க கடைய மூடிட்டு வீட்டுக்குப்போயி படுத்துடுச்சு
மறுநா எந்திரிக்க முடியல படுத்தே கெடந்துச்சு.சாயங்காலமா வீட்டு வாசல்ல கொசகொசன்னு சத்தம் கேட்டுச்சு பாத்தா
அஞ்சாறு சின்னப்புள்ளக பாட்டி பாட்டின்னு வெளிய இருந்து கூப்புட்டுச்சுக உள்ளவாங்கன்னு பாட்டி சொல்லவும் அதுக உள்ளார வந்துச்சுக. பாட்டிக்கு அடிபட்டுச்சான்னு விசாரிச்சிதுக
பாட்டிக்கு ஒண்ணும் புரியல அதுல ஒரு பொண்ணு சொல்லிச்சி ”பாட்டி ஒனக்கு ஆருமில்லைல அதான் விசாரிக்க வந்தோம்
இந்தாங்க சாப்புடுங்க”ன்னு ஒரு ஆர்லிக்ஸ் பாட்டிலகுடுத்துச்சு. இது எங்கபாட்டி
ஒடம்பு சரில்லாதப்போ சொந்தக்காரவுக கொண்டாந்து குடுத்தாக பாதி மீதமிருக்கு
அதான் கொண்டாந்தோம் சாப்புடுபாட்டின்னு சொன்னவன்ன பாட்டிகண்ணுல இருந்து கண்ணீர்வந்துடுச்சு” ஆரு பெத்த புள்ளம்மாநீ இப்புடி வளத்துருக்காக”ன்னு
கேக்கவும் அது சொல்லிச்சி ” இல்லாதவுகளுக்கு இருக்குறவுக குடுக்கனும்ன்னு” எங்க டீச்சர் சொல்லுவாங்க. அப்புறம் இந்தக்காச வாங்கிக் கங்க இது நான் உண்டியல்ல சேத்துவைச்ச காசு
அதுகூட இந்தப்புள்ளக எல்லாம் காசு வசூலிச்சிக் கொண்டுவந்துருக்குதுக வாங்கிக்கபாட்டி நீ நல்லா இருந்தாத்தான நாங்க ஒன்கிட்ட முட்டாயி எல்லாம்வாங்கிச் சாப்புட முடியும்” நு சொல்லவும் பாட்டி கண்ணுல இருந்து கண்ணீர் ஊத்த ஆரம்பிச்சது.
என்னசொல்றதுன்னு தெரியல
”இப்புடிக் குடுக்குறீங்களே உங்கவீட்டுல திட்ட மாட்டாகளா”ன்னு கேட்டுச்சு
அதுக்கு அதுக சொல்லிச்சுக ”நாங்க எல்லாத்தையும் இப்புடித்தான் பகுந்து சாப்புடுவோம்இது ஒண்ணும் புதுசில்ல எங்களுக்குன்”னு சொல்லிச்சுக
”ஆரு இதெல்லாம் ஒங்களுக்கு சொல்லிக் குடுக்குறதுநீங்க எந்தப்பள்ளிக்கொடத்துல படிக்கிறீகன்”னு கேட்டவுன்ன
”அத எங்க டீச்சர்கிட்டக்கேளுங்க உள்ளவாங்க டீச்சர்ன்னு ”சொன்னதும்
உள்ளவந்தாக அந்தடீச்சரம்மா
”, பாட்டி நாந்தான் இவங்க டீச்சர் வாரம் ஒரு உதவின்னு இவங்களுக்கு பயிற்சி குடுப்போம் எங்க பள்ளிக்கொடத்துல நேத்து சாயங்காலம் கடையில நீங்க மயங்கிவிழுந்ததப்பாத்ததும் இந்தவாரம் உங்களுக்கு ஏதாவது செய்ய னும்ன்னு முடிவுபண்ணி இவுங்களைத் தயார் பண்ணுனேன் என்பேரு பாத்திமா நான் கவருமெண்டுபள்ளிக்குடத்துலதான் வேலபாக்குறேன் இவங்க என்னோட மாணவர்கள்” ன்னாங்க
பாட்டிக்கி நன்றின்னுசொல்ல வார்த்த வரல
கண்ணீரால பாத்திமாடீச்சர்கைய நனச்சிச்சு……
அப்பசொல்லிச்சி பாத்திமா ”ஒரு அனாதையோட பசி வலி அனாதைக்கித்தான் தெரியும் நானும் ஒரு அனாதைதான்னு…..நாளைக்கி என்னோட வீட்டுக்கு வந்துருங்க ஒரு அனாதைக்கி இன்னொரு அனாததான் தொணைன்னு ”கண்ணீரோட சொன்னவன்ன பாட்டி அழுதுருச்சு…………

 

Read Previous

திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சிந்திக்க வைத்த வரிகள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular