தமிழகத்தை தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் தி.மு.க அரசின் பொது செயலாளர் மற்றும் நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சரான துரைமுருகன் அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை இன்று(03.02.2025) சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியுள்ளது.
அதாவது, கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதேபோல், மணல் குவாரியில் ஏற்பட்ட முறைகேடு விவகாரத்திலும் கதிர் ஆனந்த் மற்றும் அம்மாவட்ட ஆட்சியரிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து, அவ்விரு காரணங்களால் இன்று( 03.01.2025) மீண்டும் சோதனை நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களை சந்தித்து முடித்த பின், தலைமை செயலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்துள்ளார். பின்பு, செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது அவர் கூறியதாவது” காட்பாடி வீட்டில் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை…அந்த வீட்டில் யாரும் இல்லை. இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ? அதே அளவிற்கு தான் எனக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.