
தமிழகத்திலேயே முதன் முறையாக 10008 ருத்ராட்சங்களால் உருவான விநாயகர் சிலை – எங்குத் தெரியுமா?
மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன்முறையாக 10008 ருத்ராட்சங்களால் ருத்ர நடராஜ விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இந்த விழாவிற்காக பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. அதில், வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10008 ருத்ராட்சங்களால் பத்து அடியில் உருவான ருத்ர நடராஜ விநாயகர் உருவாக்கப்பட்டுள்ளது.