முனிவர் வேண்டாத வரம்..!! ஒரு ஆன்மீகக் கதை..!!

Oplus_131072

முனிவர் வேண்டாத வரம் ஒரு ஆன்மீகக் கதை..
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர் அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

மரத்தடியில் ஒளிப் பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும், உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து ‘மரத்தடியில் பார்த்தீர்களா?’ என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

‘பார்த்த பிறகு சும்மா எப்படிப் போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள்’ என்றாள் அம்மை.

‘அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்’ என ஈசன் சொல்ல …

அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

‘வணக்கம், முனிவரே!’ என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார்.

‘அடடே எம்பெருமானும், பெருமாட்டியுமா வரணும் வரணும்’… என்று வரவேற்றவர். அத்துடன் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவு தான் மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும் மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் ‘வணக்கம்’ என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் முனிவரிடம் பணிவாய்க் கேட்டார்.

‘முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள் கொடுக்கிறோம்’ என சொல்ல, முனிவர் சிரித்தார்.

‘வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்’ என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ‘ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம்’ என்று அம்மை அப்பன் பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். அதன் படி,’ நான் தைக்கும் போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும். அது போதும்!’ என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ‘ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே! இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்?’ என்று அம்மை பணிவாய் கேட்டார்.

‘அதைத் தான் நானும் கேட்கிறேன் நான் ஒழுங்கு தவறாமல் நடந்து கொண்டு வந்தால் வர வேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்?’ என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

இதுவே அனைத்தையும் கடந்த நிலையாகும். இந்நிலை நமக்கும் வர அதன் மூலம் முக்தி அடைய நாமும் அந்த இறைவனை பிரார்த்தனை செய்வோமாக.

Read Previous

வாத நோய்களை குணமாக்கும்.. வாத நாசக முத்திரை..!!

Read Next

உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular