
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இராமாயி பட்டி பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் (50). இவர் புதுச்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பலத்த காற்று நிலவி வந்ததை அடுத்து புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி பகுதியில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. திடீரென மின்சார தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் மின்சார பணியை மேற்கொள்வதற்காக விஸ்வநாதன் மற்றும் அவருடன் மற்றொரு மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து விஸ்வநாதன் மின்மாற்றியில் பழுது நீக்குவதற்காக மின் கம்பத்தில் ஏறி அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் உயிரிழந்த விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.