
- நாகையில் ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை – 10 நிமிடத்தில் அகற்றி மருத்துவர்கள் சாதனை.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ் வேளூரில் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழரசன்-கீதா தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில், குழந்தை சஞ்சனா நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை ஹேர் கிளிப்பை விழுங்கியுள்ளது. இதையடுத்து அந்த குழந்தை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை மீட்டு வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தக் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
அந்த எக்ஸ் ரேவில் குழந்தையின் இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதைப்பார்த்த மருத்துவர் அந்தக் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அதன் படி பெற்றோர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாவது:-
“குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.பேட்டரி மற்றும் கூர்மையான பொருட்களை குழந்தைகள் விழுங்கும்போது அது அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும். ஆகவே குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.