ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பிடுவதற்கும் திருத்துவதற்கும் மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய சம்பளக் குழுவை அமைக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், “தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆகவும், அகவிலைப்படி 55 சதவீதமாகவும் உள்ள நிலையில் 8 வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின் அரசு ஊழியர்களின் ஊதியம் கணிசமாக அதிகரிக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், “8 வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 51,480 ஆக உயரும் என்றும், மேலும் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றுடன் கூடுதலாக ஃபிட்மெண்ட் காரணியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஃபிட்மெண்ட் காரணி ஆனது “7 வது ஊதியக் குழுவின் போது 2.57% வழங்கப்பட்ட நிலையில் 8 வது ஊதியக் குழுவில் 2.86 % உயர்த்தக்கூடும்” என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். அத்துடன் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பல சலுகைகளையும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.




