வாழைப்பூ இருக்கா?.. அப்போ இந்த வாழைப்பூ வடை முயற்சி செய்து பாருங்கள்..!!

வாழை மரத்தின் காய், பழம், தண்டு, பூ என அனைத்து பாகங்களுமே நமக்கு உணவாகப் பயன்படக்கூடியது. அனைத்துமே ஒவ்வொரு வகையில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியது. குறிப்பாக இந்த வாழைப்பூ துவர்ப்பு சுவை உடையதாக இருந்தாலும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரும். வாழைப்பூ வைத்து வாழைப்பூ உசிலி, வாழைப்பூ பொரியல் என பலவகையான ரெசிபிகளை செய்யலாம். இப்பொழுது இந்த வாழைப்பூவினை வைத்து சுவையான மொறு மொறுப்பான வாழைப்பூ வடை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த வாழைப்பூ வடை செய்ய ஒரு கப் துவரம் பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவரம் பருப்பு குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். கால் கப் அளவிற்கு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாழைப்பூவினை ஆய்ந்து சுத்தம் செய்து அதை பொடியாக நறுக்கி தண்ணீரில் மோர் விட்டு அதில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழைப்பூ நிறம் மாறாமல் இருக்கும்.

இப்பொழுது ஒரு மிக்ஸியில் எட்டு வரமிளகாய், இரண்டு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம் முதலியன போட்டு அத்துடன் ஒரு பிடி ஊறிய பருப்பையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். இவை அனைத்தையும் அரை பட்ட பின்பு இதனுடன் மீதி பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு கொரகொரப்பாக அரை பட்டவுடன் தனியாக வைத்து விடலாம். இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும் இதனை அதிகம் அரைத்து விடக்கூடாது. அரைத்த வாழை பூவை பருப்புடன் சேர்க்கவும.

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவினை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். நன்கு சிவக்க வேகவிட்டு பொரித்து எடுக்க வேண்டும். ரசம் சாதம், தயிர் சாதம் உடன் இந்த வாழைப்பூ வடை வைத்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

அவ்வளவுதான் சூடான மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்..

Read Previous

பப்பாளி பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தாய்க்கு பின் தாரம் என்றால், தந்தைக்கு பின் தந்தை மட்டுமே..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular