வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க நேற்று (09.01.2025) காலை 5 மணியிலிருந்து இலவச டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் 30 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், “திருப்பதி கோவிலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் திருப்பதி தேவஸ்தானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி உள்பட 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.




