நாட்டுக்கோழி நமக்கு பிடித்த மற்றும் சத்தான இறைச்சி ஆகும். இதை கொண்டு நாட்டுக்கோழி கிரேவி, நாட்டுக்கோழி குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் என பல வகைகள் செய்ய முடியும். ஆனால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும் இடித்த நாட்டுக்கோழி ரசம் எப்படி செய்வதென்று உங்களுக்கு தெரியுமா? சளி, இருமல் மற்றும் உடல் வலி ஆகியவற்றை குறைக்கும் இந்த இடித்த நாட்டுக்கோழி ரசத்தை எப்படி செய்வதென்று காண்போம்.
தேவையானவை:
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 7
கருவேப்பிலை – 1 கொத்து
கொத்த மல்லி இலை – சிறிது
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
நாட்டுக்கோழி கால் – 100 கிராம்
தக்காளி – 2
சோம்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு அம்மிக் கல்லை எடுத்து அதில் நாட்டுக்கோழி கால்களை இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அதே அம்மியில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, சோம்பு மற்றும் தக்காளி ஆகியவற்றை நன்றாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து, அடுப்பைப் பற்ற வைத்து அதில் குக்கரை வைத்துக் கொள்ளவும். பின்பு, அதில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்க்கவும். அது பொரிந்ததும் இடித்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து நன்றாங்க வதக்கவும். பிறகு, இதில் இடித்த நாட்டுக்கோழியை சேர்த்து வதக்கவும். இப்போது, இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பிறகு, கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி இலைகளை சேர்த்து குக்கரை மூடிப் போட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான், சுவையான இடித்த நாட்டுக்கோழி ரசம் தயார்.




