அல்லிமொட்டு
மலர்ந்திருக்கு,
ஆளனுப்பு
மாமனுக்கு!
முல்லைக்கொடி
பூத்திருக்கு
சேதி சொல்லு
மாமனுக்கு!
குருத்தோலை வெட்டிகிட்டு கோவிலிலே சொல்லிப்புட்டு
மாமன் வரான்
என்று சொல்லுங்க!
பூப்போட்ட தாவணியும்,
பூச்சூட மல்லிகையும் கொண்டுவரான் என்று சொல்லுங்க!
தங்கப்பொண்ணே
என்ன வேணும்;
தயங்காம நீயும் கேளு!
தாய்மாமன் நானிருக்க
தடையில்ல நீயும் சொல்லு!
கார்முகில கொண்டு
வாரேன் தங்கமயில் நீராட!
தாரகைய கோர்த்துத் தாரேன், பொன்னுமயில் நீ சூட!
வானவில்லும் வந்திடுமா கன்னங்களில் வண்ணமிட!
ராவெடுத்து மைகுழைத்து கண்களிலே தீட்டிவிட!
ஊர்மெசச சீதனமும்
நீ மெச்ச காஞ்சிப்பட்டும்
கொண்டு வரேன்
மாமன் உனக்கு!
பட்டுப்பூச்சி நீயிருக்க
பட்டின் எச்சம்
மீதமெதுக்கு!
பட்டுப்பொண்ணே!
நீ சூட செண்டுமல்லி
பூத்திருக்கு-உன் விரல்
பேசும் அழகை காண வெண்ணிலவோ
தவமிருக்கு!
முத்துக்களும் சிதறுதடி!வெண்சங்கின் சிரிப்பொலியில்!
கதிரொளியும் கூசுதடி-உன் பொன்வண்ண தேகம் கண்டு…
ராசாத்தி போல நீ
வாழ எந்தன் உள்ளம்
வாழ்த்துதடி-பல
ராஜ்ஜியத்தின்
மன்னனெல்லாம்-உன்
பார்வைபட்டா
தவிடுபொடி….




