மிளகு தூக்கலா போட்டு இப்படி செட்டிநாட்டு ஸ்பெஷல் சிக்கன் மிளகு மசாலா செஞ்சு பாருங்க..!!

செட்டிநாட்டு உணவு வகைகள் என்றால் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற பகுதி செட்டிநாடு. இப்படி செட்டிநாட்டில் பிரபலமான ஒரு உணவு வகை தன் செட்டிநாட்டு சிக்கன் மிளகு மசாலா. இதில் மசாலாக்கள் வறுத்து அரைத்து சேர்ப்பதால் இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த செட்டிநாட்டு சிக்கன் மிளகு மசாலாவை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இந்த செட்டிநாட்டு சிக்கன் மசாலா செய்வதற்கு முதலில் இதற்கான பொடியை தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் இரண்டு டேபிள் ஸ்பூன் முழு மல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, மூன்று மேசை கரண்டி அளவிற்கு மிளகு, 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பிறகு இதனை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் ஒரு துண்டு பட்டை, 5 கிராம்பு, 3 ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய நான்கு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு இடித்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளியுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். தக்காளி நன்கு வெந்து மென்மையானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு கிலோ அளவு சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கனை நன்கு வதக்க வேண்டும். பிறகு அரை லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு சிக்கன் நன்கு வெந்திருக்கும் இப்பொழுது நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மிளகு மசாலாவை சேர்க்கவும். 5 டீஸ்பூன் அளவிற்கு இந்த மசாலாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கிளறிய பிறகு கறிவேப்பிலையை கிள்ளி இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் மூடி போட்டு பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது நன்கு கொதித்து தண்ணீர் வற்றி வந்திருக்கும். உங்களுக்கு இன்னும் கெட்டியாக வறுவல் போல வேண்டுமென்றால் சில நேரம் அடுப்பில் வைத்திருக்கலாம் இல்லையேல் இந்த நிலையில் இறக்கி விடலாம். அவ்வளவுதான் மிளகின் காரத்துடன் அட்டகாசமான காரசாரமான சுவை நிறைந்த சிக்கன் மிளகு மசாலா செட்டிநாட்டு பாணியில் தயாராகி விட்டது.

Read Previous

சாம்பார் மணக்க இந்த மாதிரி சாம்பார் தூளை அரைச்சு வச்சுக்கோங்க..!!

Read Next

ஆல் இன் ஒன் சிக்கன் கிரேவி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular