அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று: குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு..!!

Oplus_131072

 

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.
எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர்.

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது.
மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.
அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள்.
சமூகத்துடனான பழக்கமும் ஐக்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன.
ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக்கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்).
அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தாயின் கருவறை தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை – ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும்போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு அங்கே போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளையாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான்!

Read Previous

அமாவாசை அன்று என்னதான் நடக்கிறது..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பேராபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular