Motivation | அவமானங்கள் காலில் போட்ட விலங்கு என்று நினைத்துக்கொண்டு வீட்டில் முடங்கி விடாதீர்கள் வீழ்ந்து எழுங்கள்..!!

Oplus_16908288

அவமானங்கள் காலில் போட்ட விலங்கு என்று நினைத்துக்கொண்டு வீட்டில் முடங்கி விடாதீர்கள் வீழ்ந்து எழுங்கள்…

 

என்னை நானே யாரென்று

புரிய எனக்கு தேவைப்படும்

ஓர் ஆயுதம் தான் அவமானம்!

இது உண்மை என்பது போல்,

அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.

 

அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது.

 

 

நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.

 

அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

அது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு.

 

உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களை நினைத்து வருந்திக் கொண்டே இருக்காதீர்கள்..

 

நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.

நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.

 

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டும்.

 

உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்கள் ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.

சோர்ந்து போகாதீர்கள்..

 

ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி

யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.

 

எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.

 

மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.

 

ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல! என்பதை நினைவில் வையுங்கள்……..

Read Previous

ஆலமரமாய் நீங்கள் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular