சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசலில் சிவப்பு துணி ஒன்று கட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.
காவிரி நீர், மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து சிக்கல்கள் எழுவதுடன், சட்டப்பேரவையிலும் நீர்வளத்துறை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் துறை சார்ந்த பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமைச்சரின் இஷ்ட தெய்வமாக கூறப்படும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர், அதன் அடையாளமாக அறை வாசலில் சிவப்பு துணியை கட்டியிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
எனினும், சிவப்பு துணி கட்டப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து அமைச்சர் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், தலைமைச் செயலகத்தில் மாட்டப்பட்டுள்ள இந்த சிவப்பு துணி தற்போது அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.




