உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள ஆசிய காட்டு யானைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆசிய காட்டு யானைகளின் முக்கிய தாயகமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து பணியாற்றி வரும் வனத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
மனிதர்கள் மற்றும் யானைகள் இடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்தி, யானைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




