மனிதர்களுடன் நீண்ட காலமாக நெருக்கமாக வாழ்ந்து வரும் நாய்கள், பாதுகாப்பு மற்றும் நட்புக்காக போற்றப்படும் செல்லப்பிராணிகளாக உள்ளன. ஓநாய் இனத்திலிருந்து நாய்கள் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், அவற்றின் சில பழக்கவழக்கங்களும் ஓநாய்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
நாய்கள் இரவில் ஊளையிடுவது குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆவிகளை பார்ப்பதால் அல்லது மரணம் நிகழப்போவதை உணர்த்தும் வகையில் நாய்கள் ஊளையிடுவதாக சிலர் நம்புகின்றனர். ஆனால், இதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் இல்லை என கூறப்படுகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தனிமையை உணரும்போதும், தங்களின் இருப்பை மற்ற நாய்களுக்கு தெரிவிக்கவும் நாய்கள் ஊளையிடலாம். மேலும், அந்நியர்கள் அல்லது அறிமுகமில்லாதவர்கள் அந்தப் பகுதிக்கு வரும்போது, மற்றவர்களை எச்சரிக்கும் வகையிலும் அவை சத்தமிடுவதாக கூறப்படுகிறது.
நாய்களின் வாசனை மற்றும் கேட்கும் திறன் மனிதர்களை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு நாயின் மூக்கு அச்சும் தனித்துவமானது என தெரிவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையேயான பிணைப்புக்கு உடலில் சுரக்கும் ஆக்சிடோசின் ஹார்மோன் முக்கிய பங்கு வகிப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.




