சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் தொடர்ந்து மலக்கழிவு மாசுபாடு கண்டறியப்படுவது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 பிப்ரவரி மாதத்திலும் புழல் ஏரியில் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஏரிக்குள் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏரியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீரின் தரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அவர், புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




