அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன் என்ற அந்த இளைஞர், தனது தாய் சுதா வெங்கடேசன் (45), தம்பி சித்தார்த் (14) ஆகியோரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, தாயின் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, கொலைக்கான திட்டமிடலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ChatGPT பயன்படுத்தப்பட்டதாக விசாரணை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




