ஈரோட்டில் அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பான் குரங்குகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் கேசவநாதன் என்பவர் மீது வனத்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வனத்துறை அலுவலகத்தில் ஆஜரான கேசவநாதனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குரங்குகளை உரிய காலத்தில் பதிவு செய்யாதது மற்றும் ஒரு குரங்கு உயிரிழந்த தகவலை வனத்துறையிடம் தெரிவிக்காமல் இருந்தது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய பின்னர், மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குரங்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவு நடைமுறைகள் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




