சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரனின் மகள் செல்வி (21). பி.காம் பட்டதாரியான இவருக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தந்தை மகேந்திரனுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே சென்றபோது லாரி மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை மகேந்திரன் காயமடைந்து மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுநர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




