நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை மக்களவை கூடியதும், டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை முன்வைத்து கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையான அலுவல் பணிகள் நடைபெறாமல் முடக்கம் ஏற்பட்டுள்ளது.




