திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திகாவை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் அடிக்கடி கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




