Oplus_131072
கொடுமை –
நேற்று ஷாப்பிங் செய்யும் போது பல வருடங்கள் கழித்துத் தெரிந்த பெண்மணி 60 வயதுக்கு மேற்பட்டவர் சந்தித்தேன்…
நலமெல்லாம் விசாரித்து விட்டு நீங்க நிறைய பயணம் செய்றீங்களா?
கேள்விப்பட்டேன்…
நானும் காசிக்கு போணும்….
ரொம்ப நாளா ஆசை..?? எப்படி போறதுன்னு தெரியலை.??!! எனக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணி தர முடியுமா?ன்னு கேட்டார்..
சரிம்மா..!! உங்க பெண்ணிடம் கேட்டு எந்த தேதி சௌரியமா இருக்குன்னு சொல்லுங்க..
சென்னையில் இருந்து கிளம்பும் ஏதாவது குரூப் உடன் சேர்த்து விடுகிறேன்…. சொன்னேன்.
இந்த அம்மா கணவர் இறந்த பின் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, மகள் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இரண்டு பெண்கள்.. இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒரு பெண் வேறு மாநிலத்தில்.. அருகில் இருக்கும் மகள் வீட்டில் இருக்கிறார்.
சரி!! என்று சந்தோசமாக கிளம்பி போனவர் இன்று அதிகாலையிலேயே போன் பண்ணி விட்டார்…
வீட்டில் போய் கேட்டு இருக்கிறார்… அவர் பெண் சண்டை பிடித்திருக்கிறாள்…
“காசிக்குப் போவது என்றால் குறைந்தது பத்து நாட்களாகும்” வீட்டை யார் பார்த்துக் கொள்வது .??? பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது?!! என்று…..
உங்கள் மாமியாரை வரச்சொல்… !!
பத்து நாட்கள் தானே…!!
போய் விட்டு உன் அப்பாவுக்கு திதி கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன்……என்று இவர் சொல்லி இருக்கிறார்…
ம்ஹும்,, அவர்களுக்கு நான்ல வடிச்ச கொட்டனும்…??
சண்டை பெரிதாகி இருக்கிறது……
வீட்ல இருந்தா கை வலிக்குது… கால் வலிக்குது என்கிற…..இப்ப காசிக்கு போறதுக்கு மட்டும் முடியுதா??!!!!
பென்ஷன் வாங்கற திமிரு..!!???அதான் ஊர் சுத்த கிளம்பிட்டியா……??!!
மகள் வார்த்தைகளால் வறுத்தெடுக்க கண்ணீர் மல்க நீங்கள் ஏற்பாடு பண்ண வேண்டாம் என்று எனக்கு போன் செய்தார்.
புருஷனோ, மற்றவர்களோ பேசினா வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு போற பெண்கள் பெத்த புள்ள பேசும் பொழுது நொறுங்கிப் போவாங்க… நிலைகுலைந்து போய்டுவாங்க…..??!!
கண்ணு முன்னாடி கண்ட கனவெல்லாம் கானல் நீரா போறதை எந்தத் தாயாலும் தாங்கவே முடியாது…??!!
நிறைய வீடுகளில் இப்பொழுது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது..
கணவரை இழந்த நிறைய பெண்கள் மகன் வீட்டை விட மகள் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்…
தனியாக இருக்க பயப்படும் பெண்களின் பயமே அவர்களின் பலவீனம் ஆகிவிடுகிறது.
ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக எல்லாம் இழுத்து போட்டு சமையல் வேலை குழந்தைகள் கவனித்து கொள்வது என்று தன்னுடைய வயதுக்கு மேல் வேலை செய்து காண்பித்து பழக்கி விடுகிறார்கள்…..
நாள் ஆக ஆக அதுவே ரொட்டீன் ஆகி விடுகிறது…
சம்பளம் இல்லாத வேலைக்காரியாக மாறிப் போய் விடுகிறார்கள்.
எந்தக் கவலையும் இன்றி மகள்கள் ஹாயாக வலம் வருகிறார்கள்..
இந்த அம்மாவுக்கு தன்னுடைய இன்னொரு மகள் வீட்டுக்கு போவதற்கு கூட இந்த மகள் பர்மிஷன் தர வேண்டும்.
இவளுடைய குழந்தைகளுக்கு லீவு விட வேண்டும்.. கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறைக்கம்பிகளுக்கு நடுவே இருக்கிறார்கள்..
படித்த வேலைக்கு போவதை…பணம் நிறைய சம்பாதிப்பதை… சொகுசு வாழ்க்கை,அதிகாரம் மிக்க பதவி ஆகியவற்றை எல்லாம் கனவு ஆக்கிய பெற்றோர்கள் “தாய் தகப்பனை காப்பது தான் தலையாயக் கடமை “என்ற கனவை பிள்ளைகள் மனதில் பதிய வைக்க மறந்து விட்டார்கள்….
கல்லால் அடிப்பதை விட கொடுமை சொல்லால் அடிப்பது என்பதை புரிய வைக்க மறந்து விட்டார்கள்..
இது கால ஓட்டத்தின் பிழை என்பதை விட அறத்தை மறந்து விட்டோம்…




