Oplus_131072
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.. ”நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?”
அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்… ”நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?”
ஞானி சிரித்தார்…
முதல் ஆளிடம், ”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா” என்றார்.
இரண்டாமவனிடம்,
”நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா” என்றார்.
இருவரும் அவ்வாறே செய்தனர்.
முதலாமவன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான்.
இப்போது ஞானி சொன்னார், ”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்.
முதலாமவன், பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.
இரண்டாமவன் தயக்கத்துடன், ”இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?” என்று கேட்டான்.
ஞானி சொன்னார்,
”முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.
நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத் தான் மீட்சி என்பது மிகக் கடினம்!” என்றார்.
சிறு துளிகள் பெரும் வெள்ளம்..!




