பிரார்த்தனைகள் போதோ கோயிலுக்கு செல்லும் போதோ நாம் அனைவரும் முதலில் வேண்டுவது நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் நோய் நொடி இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தாலே அதுவே மிகப்பெரிய வரம் அதுவே மிகப்பெரிய சேமிப்பு ஆகும். இந்து மத தெய்வங்களில் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு அருள் புரியவும் கடவுளாக இருப்பது தன்வந்திரி பகவான் தான். இந்த தன்வந்திரி பகவானுக்கு விரதம் இருப்பது எப்படி பூஜை முறைகள் எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.
மகா கடவுள் ஆன திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் 24 ஆகும். அதில் மிக முக்கியமான 10 அவதாரங்களை தான் நாம் தசாவதாரம் என்று கூறி வழிபடுகிறோம். இந்த 24 அவதாரங்களில் 17 ஆவதாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் தன்வந்திரி அவதாரம். திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்போது அதில் ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. கற்பகவிருட்சம் ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட புனிதமான பொருட்கள் வெளிவந்தன. இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அவதரித்து அமிர்த கலசத்தை கையில் கொண்டு வந்தார். அதுதான் இந்த தன்வந்திரி அவதாரம் ஆகும்.
இவரை ஆயுர்வேதத்தின் கடவுளாகவும் வைத்தியராஜா எனவும் ஆதர்ஷ மருத்துவர் எனவும் அனைத்து நோய்களை தீர்க்கக் கூடியவர் என்று புராணங்களில் கூறப்படுகிறது. நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்ட தன்வந்திரி பகவானின் விரதம் மிகவும் சக்தி வாய்ந்த விரத முறை என்று கூறப்படுகிறது. மாதம்தோறும் வரும் தேய்பிறை திரயோதசி தன்வந்திரி பகவான் விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.
இது மட்டுமல்லாமல் ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரையோதசி தினமும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த வருடம் தன்வந்திரி விரதம் அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அதாவது ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் முந்தைய தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தன்வந்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு ஒரிரு நாட்கள் முன்பாக வருவதால் தன்வந்திரி அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவராகதால் அன்றைய தினம் அவரை விரதம் இருந்து வழிபட்டு தீபாவளிக்கு லேகியம் செய்யும் பழக்கமும் உண்டானது.
தன்வந்திரி விரதம் அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு தன்வந்திரி பகவான் படத்திற்கு முன்பு பித்தளை சொம்பில் நீர் வைக்க வேண்டும். அந்த சொம்பு தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு சொம்பின் வாய்பகுதியை கையால் மூடிக்கொண்டு 1008 முறை தன்வந்திரி பகவான் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் வைத்து தன்வந்திரி பகவான் படத்திற்கு முன்பு நோயில்லாத வாழ்க்கை தர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.




